Wednesday, September 7, 2016

பிள்ளையார் சுழி.

                                                                           ௨
                                                                           =
பிள்ளையார் சுழி.

எனக்கு ஒரு சந்தேகம். சிறிது தீர்த்து விட்டு செல்லுங்கள்.

நம் பாரம்பரியத்தை குழந்தைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை. ஊருக்கு அழைத்து செல்வது, அங்குள்ள வழக்கங்களை அறிமுகப்படுத்துவது, திருமணங்கள் பற்றி சொல்வது , வீட்டில் பூஜைகள் செய்யும்பொழுது பழைய முறைகளை கதைகளாக சொல்வது, தமிழில் அதிகம் பேசுவது பழைய விளையாட்டுகள் சொல்லிக்கொடுப்பது போன்ற விஷயங்களில் ஆர்வம் அதிகம்.

திடீர் என்று ஒரு காகித தாளை எடுத்து எழுத ஆரம்பித்தப் பொழுது வழக்கம் போல ௨ அதாவது பிள்ளையார் சுழி போட்டு எழுத ஆரம்பித்தேன். இதற்கு ஒரு வரலாறே உண்டு. திடீரென்று யோசனை.. பசங்களுக்கு என்ன என்னவோ சொல்லிக் கொடுத்து இருக்கேன், பரம்பரை, பரம்பரையாக போடும் சுழியை மறந்து விட்டேன்.

முதன் முதலில் எம். எஸ். வோர்ட் டைப் அடிக்கும் பொழுது ௨ க்கு கீழே இரண்டு கோடு போட்டு டாலர் சைன் போல பிள்ளையார் சுழி சைன் வைத்தால் என்ன என்று திட்டிய ஆள் நான். இப்பொழுதோ எங்கு விட்டேன் அந்த பழக்கத்தை? வருடணக்காக பிள்ளையார் சுழி போடாமல் எழுதி இருக்கிறேன் என்பது நேற்றுதான் உறுத்தியது. எப்படி மாறினேன்!!!!!!

ஒண்ணாவது படிக்கும் பொழுது பிள்ளையார் சுழி இல்லாத நோட்டோ அல்லது புத்தகமோ என்னிடம் இல்லை. அது ஒரு மத சடங்கு போல தீவிரமாக பின்பற்றும் விஷயம். நாத்திக வாதிகள் கூட பிள்ளையார் சுழி போடும் வழக்கம் உண்டு. கர்நாடகா வந்து அவர்களும் பிள்ளையார் சுழி போடுவார்களா என்று தேடி இருக்கிறேன்.

சிவன் ஒரு போருக்கு சென்று தோற்றுவிட்டார் எனவும்..கடவுளே போரில் தோற்ற காரணம் தேடியப் பொழுது..மகன்தானே என்று அலட்சியமாக பிள்ளையாரை வணங்காமல் சென்றதே என்ற காரணம் அறிந்து மறுநாள் மன்னிப்பு கேட்டு பிள்ளையாரிடம் சொல்லிவிட்டு அவரின் ஆதரவோடு சென்று வெற்றி பெற்றார். எனவே எதைத்தொடங்கினாலும் பிள்ளையார் வழிபாடு இல்லாமல் தொடங்க கூடாது என்ற ஐதிகம் உண்டு. சைவ, வைணவ சாமிகள் இருந்தாலும் மந்திர பூஜைகளில் மஞ்சள் பிள்ளையாருக்குதான் முதல் இடம். புல் அடிச்சிவிட்டு பிள்ளையார் முன் ஆட்டம் போடுபவர்கள் கூட பிள்ளையார் கும்பிட்டு ஆரம்பிப்பதை இன்று விநாயகர் ஊர்வலத்தில் கண்டறிந்தேன்.

இப்படி புராண கதைகள் கேட்டு பிள்ளையார் சுழி இல்லாமல் எழுதினால் அது சரியான தொடக்காமக இருக்காது என்று உணர்ந்து அந்த பழக்கத்துக்கு அடிமையானது வேறு கதை.. செக் புக்கில் நிரப்பி, கையெழுத்து போடும் பொழுது கூட ௨ கீழே இரு கோடுகள் ஆட்டோமேடிக்காக போட்ட கதையும் உண்டு.

எங்கள் சொந்தங்களில் சிலர் கார்டில் நுணுக்கி, நுணுக்கி எழுதி இருப்பர்.. ' ௨' சுழி, ஸ்ரீராமஜயம் இல்லாமல் எழுதி இருக்க மாட்டார்கள். சில அந்தக்காலத்து தீவிர ஒழுக்கம் கற்பிக்கும் பெரியவர்கள் பிள்ளையார் சுழி இல்லாத கடிதங்களை திருப்பி அனுப்பிய கதைகளும் உண்டு. பிள்ளையார் சுழி இல்லாத பேப்பர்களை காணவே முடியாது. இப்போது பிள்ளையார் சுழிகளை நினைவுக்கூறலுக்கு கொண்டு வந்து விட்டோமோ??!!!.

எங்கே விட்டோம் என்று யோசிக்கும் பொழுது..முதன் முதலில் வட இந்திய முறையில் பெரிய பிள்ளையார் சிலை வைத்து கடலில் கரைக்கும் பொழுதா என்று சந்தேகம் வந்தது..நாம அப்போவே கிணற்றில் கரைச்சு இருக்கோம்..எனவே மெரினாவில் அந்த சுழியை விட்டு இருக்க முடியாது என்ற தீர்மானம் வந்தது. பிறகு...அப்பா, அம்மா, அக்கா,தோழிகள், நண்பர்கள் எல்லார் கடிதத்திலும் நீக்கமற இருந்தது, பிறகு ஆபிஸ் லெட்டர் பேடுகள், கணக்கு புத்தகங்கள் எல்லாவற்றிலும் வந்தது..நடுவில் தொலைத்த பிள்ளையார் சுழி...ஆங் இந்த ப்ளாக், ஃ பேஸ்புக் வந்தப்பிறகு தொலைத்து இருக்கிறேன். மனிதன் மாறிவிட்டான் என்ற BGM இப்போ மனசில் ஒலிக்கிறது.

பேனா எழுதி பார்க்க, இங்கு ரீபில் பண்ண, பென்சில் கூர்ப்பு செக் செய்ய எல்லாவற்றுக்கும் உதவியாக இருந்தது பிள்ளையார் சுழியே. இரட்டை சுழி தலையில் இருந்தால் அதிர்ஷ்டம் என்று சொல்லுவார்கள். ஆனால் தலைப் பகுதியில் பிள்ளையார் இல்லாமல் எதுவும் தொடங்கியதே இல்லை. இல்லாவிடில் இரவில் சிவன் தோற்றது கனவாகவே வரும்.

இப்படியெல்லாம் வாழ்வில் ஒன்றாக இணைந்த ஒன்றை இழந்ததுக் கூட எப்போ நினைவுக்கு வந்தது தெரியுமா..டிராக்டர் பின்னாடி அபார்ட்மென்ட் பிள்ளையாரை கரைக்க செல்லும்பொழுது ஆடிக்கொண்டே பார்த்தேன்..மூன்று பட்டை விபூதி..திடிரென்று பிள்ளையாருக்கு ஏன் பிள்ளையார் சுழி போடாமல் வெறும் மூன்று கோடுகள் போட்டு உள்ளார்கள் என்று மண்டையில் பிளாஷ் அடித்தது. இப்படிதான் காரணமே இல்லாமல் சில விஷயங்கள் மண்டைக்குள் உதிக்கும். ஐன்ஸ்டீன் க்கு உதித்தால் ஆராய்ச்சி மேதை என்பார்கள்..நமக்கு உதித்தால் வேற வேலை இல்லையா என்பார்கள். இதான் உலகம்.

சரி..ஆங் பிள்ளையார் சுழியை விட்டு விட்டு சுழன்று போகிறது மனசு..ஒவ்வொருவரும் ஒரு ஸ்டைல் வைத்து இருப்பார்கள் இதற்கு. ௨ போடும் விதம்..சிலரர் அலை அலையாக போடுவார்கள். ஒரு அக்கா ரிகார்ட் நோட்டில் செம்பருத்தி பூ அத்தனை அழகாக இருந்தது. அதை விட அந்த பிள்ளையார் சுழியை படமாகவே வரைந்து இருந்தாள். முழு மார்க் அதற்கே கொடுக்கலாம். இப்பொ போல FB மார்க் இல்லாத காலம் என்பதால் சுழிக்கு நிறைய வேலைபாடுகள் எல்லாம் செய்ய நேரம் இருந்தது. இரண்டு  போட்டு..இரண்டு  கோடுகள்  போடுவதில்  கூட  எவ்ளோ  இருக்கு எழுத..தீராமல்.

கையெழுத்து ஜோசியம் போல பிள்ளையார் சுழி ஜோசியம் ஆரம்பித்து இருப்பார்கள்.. அதற்குள் அது குறைந்து விட்டது. எனக்கு ஒரு சந்தேகம்..எம்.எஸ். வோர்ட் ல பிள்ளையார் சுழி ஏன் போடுவதில்லை?

இன்னும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் பிள்ளையார் சுழி போடும் வழக்கம் இருக்கிறதா?

என் பையனுக்கு சொல்லிக்கொடுத்தால் எங்கு போடுவான்?

Tuesday, August 30, 2016

நினைவிடுக்கின் எச்சம்..உணவு.

காலையில் ஒரு ஆர்கானிக் பால் வாங்குகிறேன் என்று   தோழி  சொன்னது  என் நினைவுகளை சிறிதல்ல நாள் முழுக்க  வேலி இடுக்கு   கோழி  போல  கிளறிவிட்டது.

சேவல்  சத்தம்  வருமுன்  கோனார் குரல் ஒலிக்கும்..கோனார் வர நேரமானால் பாட்டி எண்ணெய் கிண்ணத்தோடு கிளம்பிடுவார். நன்றாக மாடு காம்புகளில் எண்ணெய் தடவி கைகளால் வழித்து இதமாய் காலிடுக்கில் சொம்பு வைத்து பால் பீச்சுவது ஒரு வேடிக்கை என்றால் கோனார் சர் சர் என்று இரண்டு லிட்டர் பாலை ஐந்து நிமிடத்தில் கறந்து அவர் தினம் கொண்டு வரும் நாகத்தகடு கேனில் இருந்து வீட்டு பாத்திரத்தில் ஊற்றி விட்டு வேகமாக சைக்கிளில் செல்வது ஒரு கலை..சைக்கிளில் அவர் வீட்டில் கறந்த பால் கேனில் இருக்கும். இதுக்கு காவலுக்கு குட்டிஸ் போகணும். பழகிய கோனாராக இருந்தால் அவரே கறந்து வைத்துவிட்டு போய்விடுவார்.

அடுத்து வாரா வாரம் மாடுகளை குளிப்பாட்டும் கொண்டாட்டம். வீட்டில் இரு  மாடுகள்., லக்ஷ்மி, சரஸ்வதி..அதில் லக்ஷ்மி சேப்பு மாடு, சரஸ்வதி கருப்பு மாடு..மிகவும் சாது. அதுதான் மிக அழகு..ப்ரெண்ட்லியாக இருக்கும். லக்ஷ்மி பொல்லாது அதன் அருகில் போக மாட்டோம். வைக்க பிரிதான் நார்,பிரஷ்...சோப்பெல்லாம் இல்லை..அதை வைத்து உடம்பு முழுக்க தேய்த்து குளிப்பாட்டுவோம். பால், தயிர், வெண்ணை , நெய், திரட்டுப் பால், பால் அல்வா எதுவும் காசு கொடுத்து வாங்கியதில்லை.

அடுத்து கொல்லைக்கு செல்லும் வைபவம். எங்கள் வீட்டில் கழிவறை அம்மா திருமணத்தின் பொழுதே காட்டினார்களாம். பெண்கள் தண்ணீர் தூக்கி கொண்டு கஷ்டப்படக் கூடாது என்று வீட்டிற்கு உள்ளேயே தாத்தா கிணறு வெட்டி வைத்து இருந்தார். (சிலர் அதுக்கு கூட பெண்களை வெளியே அனுப்ப மனமில்லாமல் உள்ளே வெட்டினார் என்று சொல்லியும் கேட்டேன்)

தாத்தா  வீடுகளில்   கொல்லைப்புறம் போவோம். மிகச் சிறு வயது.  புகை மூட்டமாய்   நினைவுகள். FM ல்ந் ஐந்து  நிமிடத்திற்கு ஒரு முறை கழிவறை கட்டு என்று வரும் மோடி விளம்பரம் தேவையா என்று தோன்றும்.. ஏன் என்றால் கழிவறை கூட இயற்கைக்கு எதிரானதே. நீர் அதில் விரயம் அதிகம். அதை கழித்துக் கட்ட சாக்கடை என்று ஒன்று உருவாயிற்று. அந்தக் காலத்தில் வீட்டு கழிவு சாக்கடை அப்படியே மரங்களுக்கு விடப்படும்.. மலம் போன்றவைகள் மண்ணோடு மக்கி உரமாகி விடும். சாக்கடை என்று தோன்றியதோ அப்போவே கொசுக்களும் அதற்கான மோசமான வியாதிகளும் உருவாக தொடங்கியது. ஆனால் நகர்புறத்தில் அது இல்லாமல் சாத்தியமில்லை. கிராமத்தில்  சாக்கடை  வாய்க்கால், ஆறுகள்  இல்லாதது  கூட  ஆரோக்கியத்தின்  ஒரு  அம்சம். நேற்று  கேட்ட கி.ரா  பற்றிய  எஸ். ரா  உரையில்  கிராமத்தில் புகும்  காற்று   எந்த பக்கத்தில்  இருந்து  வந்தாலும்  இந்த  வாசனையை  தொடாமல்  வர  முடியாது  என்று கி.ரா எழுதியதாக  குறிப்பட்டு இருந்தார்.  ஏன் என்றால்  அந்த  ஊரில்  ஒரு  பக்கம்  பெண்கள்  ஒதுங்குவதும், ஆண்கள்  ஒரு  பக்கம்  ஒதுங்குவதும்  உண்டாம்.  இதெல்லாம்  வாழ்வின்  ஒரு  அம்சமாய்  இருந்ததை   குறிப்பிட்டு இருக்கிறார். 

அடுத்து குளியல்..பெரும்பாலும் ஆறு, குளம், கிணறு. கை  பம்புகள்  லேட்டஸ்ட். துணி  தோய்ப்பதும் அங்கேயே முடிந்துவிடும். ஆண்கள் துறை, பெண்கள் துறை தனியாக  உண்டு. பாட்டி வீட்டுக்கு அருகில் காவிரியின் துணை ஆறு நாட்டாறு..அங்கு போனால் குளியலே கொண்டாட்டம். தண்ணீர் இல்லா காலங்களில் வெயில் கொதிக்கும் மணல்தான் விளையாட்டு கூடம். சமிபத்தில் சென்ற பொழுது ஆறு மணல் அள்ளப்பட்டு கோரமான ஓட்டை பனியன் போல காட்சி அளித்தது. ஒரு முறை தண்ணிர் பாய்ந்த பொழுது சென்றோம்..குளித்துவிட்டு உடம்பு முழுக்க ஒரே அரிப்பு. சேறு, சகதி..மணலே இல்லா ஆறு, பிளாஸ்டிக் பைகள் , சாக்கடை கலந்த நீர்..
அடுத்து இப்போ போல உடை கலாசாரம் பற்றியெல்லாம் தெரியாது. என் இரு பாட்டிகள் சட்டை போட்டதே இல்லை. ஸ்லீவ் லெஸ்.. எங்காவது வெளியே சென்றால் லேசாக போர்த்திக் கொள்வார்கள். மிக கம்பீர ஆளுமைகள்..அவர்கள் வைத்தது சட்டம. வீட்டில் புளி குத்துவது, துடைப்பத்திற்கு தென்னங்கீற்று கீறுவது, கொல்லைப்பக்கம் களிமண்ணில் அடுப்பு கையால் செய்வது, உளுந்து உடைப்பது, துவரை சரி செய்வது, அரிசிக்கு கல் பொறுக்குவது, கருப்பு உளுந்து களைவது போன்றவை அவர்களே செய்வார்கள்.

தேங்காய் காய வைத்து எண்ணெய் ஆட்டுவது, எள் எடுத்து அல்லது வாங்கி நல்லெண்ணெய் ஆட்டுவது, எது மீந்தாலும் வற்றல் போட்டு விடுவது, வடகம் அப்பளம் போன்றவை செய்வது, மாவடு பொறுக்கிக் கொண்டு வருவோம்..அது ஒரு பெரிய முதுமக்கள் தாழி போன்ற ஜாடியில் போட்டு வைக்கப்படும். ஒரு வருடம் கழித்து புது மாவடு வரை வரும். சென்னை சொந்தங்களுக்கு குடுத்து அனுப்பப்படும்.

ஆங் எங்கே விட்டேன்..அடுத்து  பல் விளக்குதல்..கோபால்  பல்பொடி இன்றைக்கும் அதன் ரோஸ் நிற சுவை நாவில் மெலிதாக நிரடுகிறது. காலையில் பாட்டிக்கிட்டே போனால் கோபால் பல் பொடியின் மெல்லிய நறுமணம் இருக்கும். அதை ரகசியமாக சாப்பிட்டு கூட இருக்கேன். பேஸ்ட் கெமிக்கல் எல்லாம் இல்லை. ஆற்று, குளத்து  பக்கம்  வேப்பங்குச்சி  பிரஷ்  தேய்ப்பு  வைபவங்கள்  தினம்  நடக்கும்.

அடுத்து காபி போடும் நிகழ்ச்சி... நல்ல தரமான கொட்டைகள் மாயுரத்தில் இருந்து  வந்துவிடும். அதை கருப்பாக வறுத்து மூன்று நாட்களுக்கு சேமிக்கப்படும்..ஒரு வாரம் மட்டுமே. திரும்ப புதிதாக வறுக்கப்படும். அதை காபி மெஷின் கையால் சுத்தணும். காலை ஐந்து மணிக்கு டூர், டுபுக், டூர் டுபுக்,,சக் என்று ஒரு விசித்திர இசை காபி மெஷின் எழுப்பும். கையால் பாட்டி லாவகமாக சுழற்றுவது பார்த்து ஆசையாக சுழற்ற போவேன்..என் உயரத்துக்கு அது குரங்கு பெடல் சைக்கிள் வித்தை போல இருக்கும்..அலுப்பு பட்டுக்கொண்டு ஓடிவிடுவேன். ஆனால்  அது  ஜெர்ரி  சீஸ்  மணத்தில்  மிதந்துக்  கொண்டே  போவதுப்  போல  அந்த  மணத்தில்  மிதந்துக்  கொண்டே  போய்  பாட்டி  காபி  எனக்  கேக்கலாம்..அத்தனை  திடம்  அந்த  நாசியை  இழுத்த  வாசம்.
அதில் பிததளை பில்டரில் டிகாஷன் இரக்கப்படும். அதுவும் வீட்டின் ஹைரார்ச்சி விதிப்படி வரும். திக் டிகாஷனில் தாத்தாக்கு அப்பா செல்லம் எனவே அப்பாக்கும் கொடுக்கப்படும்..இருவருக்கும் நுரைப்பால், முதல் கள்ளி சொட்டு டிகாஷனில் காபி, அடுத்து டிகாஷன் கீழே நிரம்ப பத்து நிமிடம் ஆகும். அடுத்து நமக்கு வரும்..பெண்களுக்கு அடுத்து நீர் ஊற்றிய டிகாஷன்..பெரிய பாட்டிக்கு யாரை பிடிக்கவில்லையோ அவர்களுக்கு தண்ணியாக மூன்றாவது நீர் ஊற்றிய டிகாஷன். இந்த கொடுமைக்கு சில சமயம் ஆளாவது சின்ன பாட்டியாக இருப்பார். இந்த காபி போடுவது என்பது கிட்டத்தட்ட தலைமை பதவி போல. கடைசியாக வேலை செய்பவர்களுக்கு. அந்த காபி பொடி சகல நிவாரணி போல பல் தேய்க்க, பாத்திரம் விலக்க என்று பல விஷயங்களுக்கு பயன்படும்.. ரீ சைக்கிள் ஆகாத விஷயங்களே அந்தக் காலத்தில் இல்லை.


இன்னும் வரும்.

Saturday, June 25, 2016

கவிதை எழுதுவது எப்படி?

கவிதை  எழுதுவது  எப்படி?   கவிஞ்சர்  ஆவது  எப்படி?

ஒரு  அனுதாப  பயணம்.

எல்லாரும்  கவிதை  எழுதறாங்க..நேற்று வந்த  ஸ்டேடஸ்  போடக்கூட தெரியாத  கத்துக்குட்டிகள்  கூட  கை மீறி  தொகுப்பு  வெளியிடும்  அளவுக்கு  போய்..தன்னலம்  பார்க்காமல் ஐந்து  வருடங்களாக  ஃபேஸ் புக்கில்  புகழ்பெற்ற   அஞ்சு பைசாக்கு  பிரயோஜனம்  இல்லாத  தன்னாலவர் வேலை  செய்யும்  நாம் முழிச்சிக்க  வேணாமா?

கவிதை  என்றாலே  காதல்தான்..அதுக்கு  முதல்ல பிடிக்க  வேண்டியது. நிலா..

காதல்  சிச்சுவேஷன்.. லிஸ்ட்  எடுத்தேன்.
நிலா
ரயில்
மலை.
மழை
(இப்படி சொன்னா  டோரா  சொல்ற  மாதிரியே  இருக்கே..நண்பர்களே  எங்கே திருப்பி  சொல்லுங்க) கவிதை  முக்கியம்.

நம்பர்  ஒன் நிலா..(மூணுக்கு  ஏன்  ஒண்ணுக்குனு சொல்றேன்னு  இந்த  மைன்ட்  வாய்ஸ் ..இத   கண்ட்ரோல்  செய்யணும்)
வெளியே  போய்  எட்டி  பார்த்தா  வெள்ளையா தகடு  போல  கொஞ்சம்  ஆங்காங்கே  மேடு  பள்ளத்துடன்  இருக்கு.. இதுல போய்  ஈர துணி  போல  கவிதையை  போய் பிழி  பிழின்னு  பிழியாறாங்களே  எப்படின்னு  யோசிச்சேன்..

ஆங்  நமக்கு தூர பார்வை வேணும்னு பிளானிடோரியம்  போய்  டெலஸ்கோப்பில் நிலாவை  பார்க்கப்  போனேன்.  ஒரு  மணி நேர  கியூ..சுத்தி என்ன  என்னமோ  பேசாறாங்க..  ஏங்க  கவிதைகள்  பற்றி  பட்டிமன்றம்  செய்யறீங்களா என்று  கேட்டேன்..உடனே  நோ, நோ..this year Indian  astronomers  may step up in moon..We r discussing about the advantages and disadvantages of moon mission from India..

அப்போ  இது  கவிதை  மிஷன்  இல்லையா..என்று  கேட்டுவிட்டு  பதில்  பார்க்காம  நிலாவை பார்த்துக்கிட்டே  வந்ததுல தடுக்கி விழ்ந்து  முகத்தில்  சிவப்பு நிலா.. லிஸ்ட்ல  நிலா அடிக்கப்பட்டது.

ரெண்டு  ரயில்.

சரி  ரயில பத்தி  கவிதைன்னு பேனாவும், பேப்பருமா ரயில்வே  ஸ்டேஷன்  போனேன்..ரயில்  பயங்கர  சத்தம்..அதுவும்  இல்லாம நிலையம்  முழுக்க ஒரே  முட்டு முட்டாய் கழிவுகள்.. நாத்தம்  வேற.. மூக்கை  பிடிசிகிட்டு  ஓடி வந்துட்டேன். ரயிலும்  கூன்னு லிஸ்ட்லேர்ந்து  ஓடிடுச்சு.

மூணு..மழை..
(குழந்தை ஒன்னுக்கு  அடிக்கிறாப்ல  விட்டு விட்டு  பெய்யுது..கவிதையாம்ல..மைன்ட்  அ  கழட்டி  தட்டி வைக்கணும்)
ஆடி  பார்த்தேன், ஓடி  பார்த்தேன்..நனைந்து  பார்த்தா  செம குளிரு..பல்லு தந்தி  அடிக்குது..சரின்னு கொண்டு  போன பேப்பரை வேஸ்ட்  பண்ண்ணாம போட்  செய்து விட்டு விட்டேன்..மழை  வரப்ப..பஜ்ஜி சாப்பிட்டு வடிவேலு  போல  மழை  கவிதை பேப்பரை எண்ணேய்  எடுக்கத்தான்  வருது..கவிதய  மழைக்குள்  நுழைந்து  தேடினா கூட கிடைக்கல்..

நான்கு..  மலை  பிரதேசம்(டோரா  வாய்ஸ்)
.  ஊட்டி  போகும் சான்ஸ்  வந்துச்சு...விடுவேனா..ஒஜு  குளிர்  கண்ணாடியில்  ஒஜு  என்று  எழுதினான்..ஆக   வந்துடுச்சு  வந்துடுச்சு  என்று  கத்தினேன்..

வீட்டுல  லேசா  கண்ணு திறந்து  பார்த்து  வந்தா போ..ஏன்  கத்தற என்று  திரும்ப  குமபகர்ணன் மோடுக்கு..போக..இனிமே கும்ப  ராசி  நேயர்களை  கல்யாணம் செஞ்சுக்க கூடாது  என்று அவசரமா  தீர்மானம்  போட்டேன்..

சரி  கவிதை  மிஷனை  விடவே  கூடாது..

"குளிரும்  கண்ணாடியில்
உன் பெயர் செதுக்கினேன்
பூத்திருக்கிறதே
அடடே'

   எப்படி  ஒரு  காதல் கவிதை..என்னை  நானே  மெச்சிக்கொண்டே  பயங்கர  சந்தோஷமா ஒரு  பக்கிக்கு அனுப்பினேன்.. அது  என்னை  கன்னாபின்னா  என்று  திட்ட  அப்படியே  வடிந்து விட்டது.
முயற்சி உடையார்  இகழ்ச்சி  அடையார்  என்று  வேதாளம்  தேடி கிளம்பினேன்..ஒரு  விக்கிரம்மாதித்தியளாய்..

சரி..காதலுக்கு  என்ன வேண்டும்  ...ஆகா..அது  ஒரு உணர்வு..அதானே  வேணும்..அது  இல்லாம  எப்படின்னு  ..சரி  எப்படியாவது  காதலிக்கனும்னு  முடிவு  எடுத்துட்டேன்.. 

"காதலிக்கணும்"..வார்தையிலையே  காதலி  இருக்காளே..ஆகா..கவித..கவித.
காதல் பீல்..  கொண்டு வந்து  கொண்டு  வந்து   நாம  ஹாப்பிலி  எவர்  ஆப்டரா  ஆயிட முடிவு  செய்தேன்..நாம்தான்  பீல்  மேல்  ஆச்சே..

நேரா  போய்..டேய்  டேய்  என்றேன்..யார்  இது  என்ன  மரியாதை  இல்லாம..பேசறே..இல்ல.இப்படிதான்  பேசணுமாம்  ..சின்ன  பசங்க  சொன்னாங்க  என்றேன்..சரி  சரி  வேலைய  பாரு என்று  கிளம்பிவிட்டார் ..என்ன  பார்க்கிறது..

ஆங்..அடுத்து ரொமாண்டிக் லுக். பார்த்து  பார்த்தே  கவிதை  எழுதணும்..ஒரு  கவிதைத் தோழி  எழுதியிருந்தா.."குறைந்தபட்சம்  உன்னை கவிஞர்  கூட  ஆக்காவிடில் என்ன  காதல்  அது" ..(Sridevi Ramya) என்று..இன்னொரு  தோழியோ.."இந்த அன்பு காதலை கூட   கொண்டு வராவிடில்  என்ன அன்பு"   என்றாள்..இந்த   கோட்  லாம் நல்லாத்தான்  இருக்கு..இனிமே  காலை  வேளையில்  கத்தாம  காதலோடு  பார்க்கணும்..பாவம்  இன்னும்  அன்பா இருந்தா அது  வந்துடும்..நாமும்  கவிதையா  போட்டு  ஐநூறு  லைக் வாங்கிடனும்..என்று  தீர்மானம்..
அடுத்து  ரொமாண்டிக்  லுக்..கண்ணாடி  முன்  நின்று  தினமும்  பிராக்டீஸ்  செய்ய  வேண்டும் என்று  வித  விதமாய்  பார்த்தேன்..கண்ணில்  காதல்  வழிய  ஒரு  பார்வை  எனக்கே  பிடிக்க  நானே  கண்ணாடியை  பார்த்து திருஷ்டி கழித்து..அடியே  ராசாத்தி  உன்னை  பார்த்தா உனக்கே  காதல் வரும்..போ  போ..இந்த லுக்கோட போனா பீல்  வந்து  பீல்மேல் கவிதைதான்..அடுத்த வருஷம் தொகுப்புதான்..விழாக்கு  அந்த கவிதை பிரபலத்தை  கூப்பிட்டா   ஆயிரம் பிரதி  கியாரண்டி..(அவரோட  புத்தகமே  நூறுதான்  போயிருக்கு என்ற  விவரம்  எனக்கு  இன்னிக்குதான்  தெரிஞ்சுது)
ஆங்..ட்ராக்  மாறுது,..

ரொமாண்டிக்  லுக்..இரவு  சாப்ட்டு வரப்ப  சரியான  நேரம்..என்று  பார்வையை  சரி  பண்ணிக்கிட்டு  எதிர்த்தாப்ல இருக்கிற  சோபால  தலையை  லூஸ்  ஹேர்ல விட்டு, செமையா  ட்ரெஸ்  பண்ணிக்கிட்டு கால்  மேல  கால் போட்டுக்கிட்டு உக்காந்தேன்.

என்னம்மா, என்னம்மா என்றார்..மனசுக்குள்..ஆகா..காதல் பொங்க போகுது..பார்வைகள் சந்தித்து  மோதி..பிரளயம் வெடிக்கும்..அதிலிருந்து  காதல்  கவிதைகள்  பிறக்கும்..என்று  மனசுக்குள்  பட்டாம்பூச்சிகள்  பறக்க..

என்னடி  நல்லாருக்கியா என கேக்க..எத்தன நாளாச்சு..நம்ம நேர்மறை  சிந்தனைக்கு  கிடைத்த வெற்றி..ரகசியம் புத்தகம்  சொன்னது  போல. சக்தி  வேலை  செய்து..என்று  சூரியன்  வெள்ளிச்சம் அடிச்சுது..சாதிச்சிட்டோம்ல. ..என்ற கர்வத்துடன்..அந்த  ரொமாண்டிக்  லுக்  கை தொடர்ந்தேன்..

"என்னடி  செய்யற..இப்படி  பார்க்காதே..என்னமோ  போல  இருக்கு"  (இன்னும்  என்னை  என்ன  செய்ய  போகிறாய்  சிச்சுவேஷன்  டியூன்  வேற  மைன்ட்ல ஓடுது ) என  சொல்ல..ஆஹா...இப்படியே  பிக்  அப்  பண்ணி  இந்த  பீல் ல  பத்து  கவிதைகள்  போட்டுடனும்னு மைன்ட்  வாய்ஸ்  திரும்ப சொல்ல.. "உங்களதாங்க அன்பா பார்த்துகிட்டு  இருக்கேன்"  என  நான் சொல்ல.. அவர்  கண்கள் மின்னும்..காதல்  பிறக்கும்..உணர்வுகள்  பொங்கும்..டுயட்  சிச்சுவேஷன்  இன்னும் தேடனும்..என்று ஒரே  கற்பனை  கவிதைகளா ஒடிச்சு...அப்படியே  சினிமாக்கும்  லிரிக்ஸ்  என்று  தறிகெட்டு  ஓடுது..எண்ணம்...அங்க..முதல்   முறையா  என்னை  பார்த்து  கலங்கிவிட்டார்..பேஸ்புக்  பைத்தியம் பிடிக்கும்னு நினைச்சேன்..இப்படி மோட்டு வளைய  வெறிச்சு வெறிச்சு  பார்க்கிற  அளவுக்கு முத்தும்னு  நினைக்கல.ன்னு  சொல்ல..தல  சுத்திடுச்சு.. "உங்களைதான்  பார்த்துக்கிட்டு  இருந்தேன்  மாமா" ன்னு  சொல்ல..தலை தெறிச்சு..தெறி படம்  பார்த்த  மாதிரி  ஓடறார்.

காதல் பிக் அப்  செய்ய  போனா..ஓடின  வேகத்துல கார்ல  போய் பிக்  அப்  பண்ற  நிலைமை  ஆயிடுச்சு.

முத்தும்..ஆக...அவர்  வாயாலையே  பாயின்ட்  எடுத்து  கொடுக்க.ஆங்  முத்த  கவிதை..இனிமே  இவங்க  ஹெல்ப்லாம்  இல்லாம சொந்தமா  யோசிக்கணும் என்று களத்தில் இறங்கினேன்..

"முதுகில் முத்தம்
ஜில்லென்று
இறங்கி கரையும்
ஐஸ்  கத்தி போல".

இதையும்  அந்த  பக்கிக்கே  அனுப்பி வச்சேன். ஏண்டி..முதுகுல  கத்தியால  கதற  கதற  குத்தற..முடியல்.. ..பீல் இருக்கணும்டி..என்று  ரிஜக்ட்  செய்ய..கிரர்ர்ர்ரர்ர்ர்ர்..ஆனால்..மனதுக்குள்  ராபின்  ஷர்மா  வந்து வெற்றி, விடா முயற்சி  கிளாஸ் எடுக்க  கவிதை நோக்கிய  பயணம்  நிற்கவில்லை.

வெண்பா  என ஒருத்தர்  தூண்டி விட..

"கற்க  காதல்  கசடற கல்லாவிடில்
கவிதைக்கு கெஞ்ச  தக".

இது  என்னனு  அந்த  பக்கி  கேட்டுச்சு..குறள் வெண்பாவில்  காதல்..அது  ப்ளாக் பண்ணிட்டு  போக.காதல் கவிதை  படிக்க வேற  பக்கி   தேட  வேண்டிய நிலைமை.

சரி  வராத  காதலை  வா  வான்ன  எப்படி வரும்..எப்படியாவது..சிச்சுவேஷன்  கவிதை  எழுதிடுவோம்னு  மண்டைய உடைச்சேன்..அப்போ  சிச்சுவேஷன்  என்னன்னா பர்பிள் லெக்கிங்க்ஸ்  காணாம போய்  தேடிகிட்டு  இருந்தேன்..வெளியே நாலு இடத்துக்கு  போய்  வந்து பிரயோஜனமில்லை..இருக்கிற  சிச்சுவேஷனை  பிடிச்சு  ஏறிட  வேண்டியதுன்னு  முடிவு  பண்ணிட்டோம்ல.
பர்பிள்  ..ஆங்  கத்திரி  பூ  கலர்..வெளிர், அடர்  என்று..இடையில் இருக்கும் நிறம்..இடர் ன்னு வரும்மா தமிழில்  என்று யோசித்தேன்.

"அடர்  கத்திரி காலை அழுத்த
இடர் செய்யும் அலமாரியை அகற்றி
படர்ந்திருந்த" 
.ம்ஹூம் அடி..முதல்லேர்ந்து..

"நான் அடர் கத்திரிப்பூவைத்தான்  தேடினேன்
பச்சை, நீலம், சிவப்பு கலைக்க
வெள்ளை, கருப்பு வா வா என கண் சிமிட்ட
நான்  கத்திரிப் பூவைத்தான்  தேடினேன் ..

நாளை கரும் மஞ்சளாக இருக்கலாம்
நேற்று  இளம் ஆரஞ்சாக இருக்கலாம்
நான் அடர் கத்திரிப் பூ வதான் தேடினேன்...

கதவின் இடுக்கில் எட்டி பார்க்கும் துப்பட்டாவை
நகர்த்தி வைத்தலில் பெண்ணியம் மிளிர 
நான் அடர் கத்திரிப் பூவைதான்  தேடினேன்.

அடுத்த, முன் பொழுதுகளின்  பொருத்தம்
பொருத்தமற்று  போகும் கணத்தில்
நான் அடர் கத்திரிப் பூவைதான்  தேடினேன்.

நிறமென்பது  நிறமில்லாததும்
கத்திரி   என்பதெல்லாம்  கத்திரி அல்ல.
நான் அடர் கத்திரிப் பூவைதான்  தேடினேன்.
நானே  அந்த  கத்திரி ப்பூ  என்றறியாமல்."

வந்து  கொட்டிக்கிட்டே  இருக்கு..ஆஹா  கவிதை  வந்துடுச்சு..என்று  இன்னும்  நாலு சிச்சுவேஷன்..அப்புறம்  நாலு  போட்டோ  எடுத்தேன்..அருவி  போட்டா..
" உன் ஷேவிங் கிரீம் நுரையாக
அருவி  நீர்.. நிற்கும் கணத்தில்
மணம் நனைத்தது"..

ஆஹா..அருவி  நுரையும்..ஷேவிங் நுரையும்..வெள்ளை வெள்ளை..பிடிசுட்டோம் ;ல..இனிமே  என்னை  யாரும் தடுக்கமுடியாது..நானும்  கவிஞ்சர்  ஆகிட்டேன். பெண்ணியம்..பித்தளை  கவிதைகள்  போட்டு  பிரபலமாவதே  லட்சியம் இனி.
ஒரு  கவிஞர்  உருவாகி  விட்டார். 
.



Friday, June 10, 2016

என்னை வென்ற தருணம்.

என்னை வென்ற தருணம்.
மிக நெகிழ்வான ஒரு பயணம். எதிர்பார்த்து, இதற்காக உடை அதற்கு மேட்சாக கொலுசு முதல் ஜிமிக்கி வரை வாங்கி, கடைசி நிமிடம் வரை டைலரிடம் அலைந்து..ஆச்சு.
காரை மிதித்தால் ஆறு மணி நேரம்..வீட்டில் மூவருக்கும் கார் பயணம் பிடிக்கும் என்பதால் கார் முடிவாகிவிட்டது. எப்பவும் நடுவில் கொஞ்சம் வாங்கி ஓட்டுவேன். சென்ற இருமுறையாக நிறையவே லாங் டிரைவ் ஓட்ட ஆரம்பிச்சாச்சு.
சிறு முதுகு பிடிப்பால் சரியான வலி தரனுக்கு. மிகுந்த வேலைகளுக்கு நடுவில் வந்ததால் உடனே திரும்ப நிலைமையும். நான் டிரைவ் பண்றேன் கவலையை விடுங்க என்றவுடன் அவருக்கும் ஆசுவாசம் ஆகியது.
இங்கு தரன் முழுக்க நம்பி அவரின் வண்டியை கொடுத்தாலும் (இருவரும் ஒருவரின் வண்டியை அடுத்தவர் தொட மாட்டோம்..போன் போல..) என்னை நான் வெல்வதே எனக்கு மிகப்பெரிய பிரச்னை. அடுத்தவர்களை கவனிக்க முடியாமல்தான் ஓட்டமாய் வாழ்க்கை துரத்திக்கொண்டு இருக்கிறது. யாருக்காவது ஏதாவது சொல்ல வேண்டும் என்றாலும் சோதித்து கொள்ளாமல் சொல்லமாட்டேன். எனக்கான முதல் எலி நான்தான். நிற்க.
சில வருடங்களுக்கு முன் அக்காவின் காரை எடுத்துக்கொண்டு குழந்தைகளுடன் தஞ்சாவூரில் இருந்து மாயூரம் வந்துக்கொண்டு இருந்தோம். அதற்கு முந்தைய மூன்று நாட்கள் தூக்கமில்லாத அலைச்சல்.
ஆர்.ஜே பாலாஜியின் நகைச்சுவை தொகுப்பு..போன் போட்டு கலாய்ப்பது கேட்டு சிரித்துகொண்டே வந்தோம்.. ஒருசமயத்தில் காரில் அனைவரும் தூங்கி விட நானும் கேட்டுக்கொண்டே கார் ஒட்டினேன். கண் சொக்குவதாய் தோன்றியது..வழியில் கும்பகோணம் காபியின் ஒரிஜினல் வர்ஷன் அப்போவே..பித்தளை டபரா, டம்ளர் அழகிய வேலைப்பாடு உள்ள இடம் என்று காபி கண் சிமிட்டி கூப்டது. போயிருக்கலாம்.. கண் வேறு கெஞ்சியது...மன உறுதி அது இது என்று சமாதானப்படுத்திக்கொண்டு கண் கெஞ்சியதை ஓரம் கட்டினேன்.
சொன்னப் பேச்சை கேக்கும் உடல் என்று கொஞ்சம் கொழுப்பும். உடல் சொல்வதை கேக்காமல் சென்றதற்கு அது சரியான பழிவாங்கல் வைத்து இருந்தது தெரியாமல் போய்விட்டது. எதிரில் வேகமாக பேருந்துகள் அந்த ஒற்றை ரோடில்..
டமார் சத்தம். கார் ஒரு மரத்தின் மேல் மோதி நின்றது. ஒரு குடிசை வீடு. மரம் இல்லாமல் இருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று தெரியவில்லை. பின் சீட்டில் குழந்தைகள்,.எதுவும் நினைவில் இல்லை. எப்படி மோதியது என்றே தெரியவில்லை. ஒரு கணம் எல்லாம் இருட்டிகொண்டு சென்றது மட்டும் நிஜம். கண் அசந்து என்னை ஏமாற்றி விட்டது.
அதுவும் கூட உணர முடியாத ஷாக்கில் நானும் ரவுடி வடிவேலு போல பேஸ்மென்ட் விடாமல் நடுங்கிக்கொண்டு இருக்கிறது. எல்லாரும் சமாதானப்படுத்தி ஊரில் விட்டு..மாமாக்கு சரியான வேலை மற்றும் செலவும். நான் கண் அசந்தது பற்றி யாரும் என்னை எதுவும் சொல்லாமல் சென்றது குற்ற உணர்வு ஆழமாக இருந்தது. எந்த மன்னிப்பும் ஈடு செய்ய முடியாத பெருந்தவறு அது.
அன்றைய பாதிப்பு வெளியே தெரியவில்லை. ஆனால் ஆழமாக வெளியே சொல்ல முடியாதவாறு மனதில் பாதிப்பு. எங்கையாவது அதிக நேரம் நேரான ஹை வேசில் ஓட்டினால் என்னை அறியாமல் கண் சொக்கும்..என்ன செய்தாலும் தடுக்க முடியாது. அதாவது கால்விரல் நுனியில் இருந்து தூங்கியே ஆகவேண்டும் என்பதுபோல் உடலெங்கும் ஒரு உணர்வு எழும்பும்.. வண்டியை நிறுத்தி சரி செய்துகொண்டு மேலே போக வேண்டும். என்ன செய்தும் இதில் இருந்து மீள முடியவில்லை. அந்த விபத்தில் இருந்து விவரிக்க முடியாத தூக்க உணர்வு என்னை துரத்துவதாக நம்ப ஆரம்பித்தேன்.
இரண்டு மணிநேரம் மேல் ஓட்டினால் தரனிடம் கொடுத்துவிட்டு அடித்துப்போட்டதுப்போல தூங்கிடுவேன். இந்த முறை மூணாறில் இருந்து வரும் பொழுது ஏழு மணி நேர டிரைவிங் என்றாலும் நடுவில் தூங்கிகொண்டேன். தூக்கம் வருதா என்றுக்கேட்டால் கூட எனக்கு வந்துவிடும்.
இந்த முறை நான் தூக்கத்தில் இருந்து விடுபட்டு முழுக்க ஓட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன். இத்தனை நாள் அதிகம் விவாதிக்காத விஷயமாக வெக்கப்ப்ட்டுகொண்டு சொல்லாமல் வைத்து இருந்தேன். மூன்று மணி நேரம் கழித்து தூக்கம் ஆரம்பித்தது. தரனிடம் இந்த பிரச்னையை விரிவாக சொன்னேன். சொன்னவுடனே கொஞ்சம் அந்த டென்ஷன் குறைந்தது. கொஞ்சம் கண் சொக்கும் இருந்தாலும் நீர் குடித்து. சுக்கு காபி குடித்து சரி செய்துகொண்டு நானே பிடிவாதமாக கார் ஒட்டிக்கொண்டு வந்தேன். தரனும் மிகுந்த சப்போர்டிவாக பேசிக்கொண்டே வந்தார்.
முதன் முறையாக ஒரு இடத்தில கூட கொடுக்காமல் நானே செய்த லாங் டிரைவ். என்னை வெல்ல வேண்டியதுதான் எனக்கு சவாலே. இதில் இருந்து முதல் படியில் வென்றுள்ளேன் என்றே நினைக்கிறேன்.
பார்க்க ஒரு சிறு பிரச்னையாக இருப்பினும் இது மனதிற்குள் மிகு தொந்தரவு கொடுத்து வந்தது என்பதே உண்மை.
நம்மை வெல்ல இதை நான் முயற்சி செய்கிறேன்..
நம் பிரச்சனையை வெளியே சொல்லிவிடுவதே நல்லது. அதிலையே பாதி டென்ஷன் வெளியேறி விடும்.
நம்மால் தீர்க்க முடியாவிடில் அடுத்தவர் துணையை நாடுவது தவறில்லை.
ஒரு இலக்கு வைத்துகொள்வது நல்லது. இதை செய்தால் நான் வந்து போஸ்ட் போடுவேன் என்று நினைத்துகொண்டேன்.
எதையும் ஏற்றுகொள்ளும் மன உறுதி அவசியமாகிறது.
முதலில் நெகடிவ் எண்ணங்களை தூக்க பாசிடிவாக யோசிக்க வேண்டிய அவசியம் அதாவது தூங்கிடுவேன் என்ற எண்ணத்தை விரட்ட...என்னால் விழிப்பாக ஓட்ட முடியும் என்ற பாஸிடிவ் எண்ணம்..
தூங்க மாட்டேன் என்ற எண்ணம்இருந்தால் மனம் தூக்கத்தை மட்டும் சுத்தி நிக்கும். இதுபோல பழைய நெகடிவ் எண்ணங்களை களைய வேண்டியது அவசியமாகிறது.
இப்படிதான் என்னை நான் கொஞ்சம் கொஞ்சமாக ஜெயித்துக்கொண்டு இருக்கிறேன். எல்லாருக்குமே அவரவரை ஜெயிப்பதுதான் பெரிய சவால். ஏனென்றால் நம் பேச்சை நாமே கேக்கமாட்டோம் என்ற மனம்..வெல்வது கடினம் என்றாலும்..வெல்ல முடியும்..என்ற நம்பிக்கை வளராமல் இல்லை.
அடுத்து விடாமல் ஒரு கோவா ரோட் ட்ரிப் என் டிரைவிங்கில் செல்ல வேண்டும். அம்புட்டுதான் ஆசையே.

Monday, May 2, 2016

நேற்றைய நாளை.

நேற்றைய நாளை.

உபயோகிப்பது எல்லாம் OLA என்றாலும் நான் அதற்கு எதிரானவள். ஏனெனில் எந்த மோனோகாமியில்(Monogamy) இறங்கும் முதலாளித்தத்தவமும் தங்கள் நரி முகத்தை காட்டியே தீருவார்கள். உள்ளூர் பானங்களை தேடி தேடி காலி செய்த பெப்சி, கோலா ஆரம்பித்து இன்று அக்காமாலா OLA வரை.

உள்ளூர் பாஸ்ட் ட்ராக் போன்றவற்றில் கை வைத்தால் கூட பரவாயில்லை, தெருக்கோடி டாக்சி டிரைவர் முதல், ட்ராவல்ஸ் வரை ஒழித்துக் கட்டிக் கொண்டு முக்கோடி தேவர்களையும் ola லா,லா என்று சொல்ல வைத்து விட்டது. அடுத்து கொடியெல்லாம் கட்டி ஒற்றுமையாக சங்கம் வைத்து கொள்ளையடித்துக் கொண்டிருத்த தனிப்பட்ட ஆட்டோக்களுக்கும் செக் வைக்க ஆரம்பித்து இருக்கிறது. இருக்கும் நாலு நல்ல ஆட்டோகாரார்கள் கூட ஒலாவில் சேர்ந்து அவர்களுக்கு கொள்ளையில் பங்கு கொடுத்து மிச்சத்தை எடுத்துக்கொண்டு முதலாளி நிலமையில் இருந்து தொழிலாளி நிலைமைக்கு வருவார்கள். இவர்களுக்கு கஸ்டமர் மார்க் கொடுத்தாதான் அடுத்து அடுத்து சவாரிகள் கிடைக்கும். இதில் எங்கு முதலாளி ஆவது.

அதன் ஆப் கூட சரியாக சண்டைப் போடுவேன். OLA app. ஒரு வேலை. சுத்தி சுத்தி பிளாஷ்பேக் காட்டி மஞ்சள் கருப்பில் மின்னியது. இந்கிட்டு..தோ பாரு உன் வீட்டாண்ட மினி இருக்கு 1.6 x தான் போவிர்களா என்றது. இல்லை என்றேன். சரி மைக்ரா, ஏ.சி புச்சு நைனா புச்சு காசும் குறைச்சல் போவியா என்றது. சரி அனுப்பு என்றேன்..நைனா இப்போ பீக் ( பெங்களூர் ட்ராபிக் எப்பவும் பீக் தான்) 1.8 X தர்றியா நைனா...வாயில் கெட்ட வார்த்தை வந்தே விட்டடது. வர வர கிராமத்து நினைவுகளும் அவர்களின் கெட்ட வார்த்தைகளும் நினைவுக்கு வருகின்றன. முக்கியமா ஃபேஸ் புக் கில் ஒரு மிக நல்ல பெண்ணை வம்புக்கு இழுத்தால் நிகின் பேசும் நான்கு மொழி வார்த்தைகளும், ஊரில் பேசும் அத்தனை கெட்ட வார்த்தைகளும் அந்த போஸ்ட் மேலேயே எச்சிலோடு விழுகின்றன. அதற்கு ஜிங் ஜாங் கமென்ட் செய்தவர்களின் கதி அதை விட மோசமாய். அந்த நல்ல பெண்ணை பற்றி பிறகு சொல்கிறேன். அவர் நமக்கு மிக வேண்டப்பட்டவரே. இந்த மெண்டல் லட்டி நல்லதா என்று யோசிக்க வேண்டும். வயசுதான் ஆகிறது. இதற்கு ப்ளாக் நல்லது (blog இல்ல block) என்றே தோன்றுகிறது.

இந்த ஃபேஸ்புக் கதை வேண்டாம். டென்ஷனை கிளப்பு. ஆங் ஓலா க்கும் எனக்கும் போராட்டாடம்டம் . இப்ப எவ்வளவு என்றேன். வண்டிகள் இல்லை என்றது. பிறகு ஐந்து நிமிடம் கழித்து எம்புட்டு சொல்ற..பீக் போச்சா என்றேன்.. போச்சே 1.2X என்றது..ம்ஹூம் மெக்ரா எம்புட்டு..அது இங்கிட்டு இல்ல என்றது. 
விடுவேனா ஆட்டோ என்றேன் ..அது மீட்டரில் வரும். பத்து ரூபா மேல போட்டுக் கொடு என்றது. சீல் வைத்த ஆட்டோவையை சந்தேகப்படும் இனம். என்கிட்டவா என்று கொஞ்ச நேரம் சும்மா இருந்தேன்.
அப்பொழுது இணைய நண்பரரிடம் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு ஒலாவில் போவதா காரில் போவதா குழுப்பம் இந்த இரண்டில் ஒண்ணு சொல்லுங்க என்றேன். பக்கத்தில் யார் இருந்தாலும் கேப்பேன். உங்கள் இஷ்டம் என்று அவர் தல தெறிக்க ஓடுவது தெரிந்தது.

ஒலாவில் அறநூறு ரூபாய். அலுப்புபடாமல் ஓட்டினால் ஐநூறு மிச்சம். பார்கிங் செய்ய வேண்டுமென்றால் சிட்டி மார்க்கெட் அருகில் இருக்கும் ஒரே பார்கிங் மகாராஜா காம்ப்ளக்ஸ். நானோ SJP ரோடு செல்ல வேண்டும். தரன் அழகா ஒலாவில் கடை வாசலில் இறங்கி, ஏறி வா என்று பச்சை கொடியும் காட்டினார். நாம்தான் சொன்ன பேச்சை கேக்கும் ஊருக்கு போய் கூட தெரியாதே.
உடனே போனில் கூப்பிட்டு அந்த ஐநூறு க்கு ஒரு டாப்ஸ் வாங்கினா கூட உண்டு. (நீ ஐநூறு க்கு வாங்கிடுவியாக்கும் என்ற மைன்ட் வாய்ஸ் சத்தமா கேட்டது) நானே டிரைவ் செய்து போகிறேன் என்றேன். 

இந்த SJP ரோடில் பார்க்கிங் செய்ய காலையில் ஐந்து மணிக்கே வந்துவிடுவார்களா என்ற சந்தேகம் எப்பவும் உண்டு. கார்கள் அத்தனை குப்பையா, தூசியுடன் இருக்கும். ஆனால் காலை போனால் மிக மிக அழகாக மாலையும், பூக்களும், பொக்கைகளும கர்நாடக மாநிலத்திற்கே சப்ளை செய்வது போல சந்தைப்படுத்தப்பட்டிருக்கும். இப்பொழுது குப்பையும், கூளமும். காலையில் மணமும் பூக்களும் ஒரே தெரு கல்யாணம் மற்றும் ஆஸ்பத்திரிக்கு தனி தனி புடவை கட்டிக்கொள்ளும் பெண் போல எப்படி வேஷம் போடுகிறது என்று ஆச்சரயமாக இருக்கும்.

ஆங் ஒலாவில் விட்டு எங்கோ..கடைசியில் இன்னாதான்பா சொல்றே ன்னேன். ஆப் இவ நமக்கு ஆப்பு வைக்க வந்தவ போலன்னு சந்தேக கண்ணோடு பார்க்க ஆரம்பித்து விட்டது. உடன் 2.2X தான் இருக்கு போறியா என்றது. அதாவது 2.2. மடங்கு கட்டணம். போய்யா டிராபிக் எம்புட்டு இருந்தாலும் நோக்கு அஞ்சு பைசா தரமாட்டேன் என்று ஆப்பை ஆப் செய்தேன். உடனே 50% ஆட்டோவில் போக கோட் வச்சுக்கோ..நோக்கு மட்டுதான்.என் செல்லம்ல உடனே ஆட்டோ புச்சி போவியாம் என்றது.
கோடாம் கோடு..என்கிட்டேவா..காலா வையே வந்து பாரு என்பேன்..இந்த ஓலா சும்மா..என்று காரை எடுத்தேன்.

பார்கிங் அதிர்ஷ்டவசமா கிடைத்து விட்டது. ஒரு முறை பைக்க அந்த தெருவில் பார்க்கிங் செய்து இருந்தேன். கையில் முழுக்க சாமான்கள். பழம, காய்கறி வேறு, எத கம்மி என்று சொன்னாலும் பொறுக்கும் ஜாதி. திரும்பி வந்துப் பார்த்தல் வண்டியை காணும். அந்தளவுக்கு ஏரியா பழக்கமில்லை. வண்டி கலாசிபாளையம் போலீசிடம் இருக்கும் போங்க என்றார்கள். ஆட்டோவில் செல்ல கூட அதிக பணம் இல்லை. கார்டுகள் இல்லா காலம். நடந்து நடந்து களைத்து சென்றேன். நல்ல வேளை வண்டி இருந்தது. நூறு என்றார்கள். கையில் அத்தனை இல்லை. பெண் என்றால் கர்நாடக டிராபிக் போலீசார்கள் கண்டிப்பாக இரங்குவார்கள். சாரே கொத்தில்லா சாரே. நான் ஏன் மாடலி, அஷடு காடிகள் ஜதை ஆக்பிட்டு வந்தேன். இனி மாடல்லா, தப்பாயித்து என பாவமாக சொல்ல, வண்டியை கொடுத்துவிட்டார்கள். வரும்பொழுது டீ செலவுக்கு போலீசிடம் பணம் வாங்காமல் வந்தது ஏனோ நினைவுக்கு வந்தது. ஆனால் அவர்கள் அனுபவத்தில் எத்தனைப் பேர் பார்த்து இருப்பார்கள்.

அந்த தெருவில் போர் சாமன்கள், கிரைண்டர் சாமான்கள். குழாய் சாமன்கள் என்று எல்லா ஹோல்சேல் கடைகளும் உண்டு. ஒவ்வொரு குறுக்கு தெருவிலும் ஒரே பொருட்கள் பல கடைகளிலும் இருக்கும். கார்பன்டரி பிட்டிங்க்ஸ் ஒரு கடை, வெறும் இரும்பு பர்னிச்சர் ஒரு தெரு, எலட்டராணிக்ஸ் ஒரு தெரு, எலட்ரிகல் ஒரு தெரு. வெளியூர் வாசிகள் உள்ளே செல்வது அத்தனை நல்லதல்ல.


சில கடைகளில் தீவிரமாக பார்கயின் செய்து கொட்டேஷன் வாங்கினேன். பெங்களூருவை பொறுத்தவரை நன்றாக பேரம் பேசலாம். ஒன்றும் சொல்ல மாட்டார்கள். கோவமும் வராது.

ஒரு குறுக்கு தெரு நுழைவில் கபாலி டீசருக்கு ஆளுயர கட் அவுட்..தலைவரருடன் கூட அத்தனைபேர் ஆளுயுர போட்டோவும் இருந்தது. எல்லாருக்கும் தனக்கு கட் அவுட் சிட்டி மார்கடடில் வைக்க முடியுமா? தலைவர் பேர் சொல்லி வைத்தாயிற்று. தமிழனடா.. அத்தனை பர பர பர தெருக்கு முன் பெரிய பார்க். உயிரை கையில் பிடித்து கிராஸ் செய்து (அறுநூறு ரூபாய் மிச்சப்படுத்த அந்த தெருவில் பல தற்கொலை முயற்சிகளை தாண்டி வர வேண்டி இருக்கிறது) ஊரில் எது நடந்தாலும் எதுவும் பாதிக்காமல் மடியில் படுத்துக்கொண்டு, சாய்ந்துக் கொண்டு , முகம பார்த்து, சண்டைப் போட்டுகொண்டு வித வித போஸ்களில் லவ் பேர்ட்ஸ். எதிர் சாரியில் ஐம்பது ரூபாய்க்கு மாடு போல வண்டி இழுக்கிறார்கள் . இங்கு இப்படி என்ற கம்பியுனிச சிந்தனையை புதைத்து விட்டு வாலண்டைன் சிந்தனைக்கு தாவினேன். என்னவோ பார்க்கில் சிறுசுகளை பார்க்கும் பொழுது கல்யாணம் செய்து வைக்கும் சிவ சேனா நினைவும்..

ஒரு ஜாம் தவிர்க்க சந்தில் புகுந்து அரை மணி மிச்சப்படுத்தி திரும்பினால் பயங்கர டிராபிக் ..வலதுபக்கம் ஒரு சிலை கத்தி கேடயம் வைத்துகொண்டு. சிவாஜி ஜாடை..ஆனால் நின்றுகொண்டு. ஒரு ஆயிரம் முறை கடந்துருப்பேன். இன்று வரை சிலையும் தெரியல, அது யாருன்னும் தெரில. நம்ம ஊர் போல கண்ணகி சில, காந்தி சில பஸ் ஸ்டாப் வைக்கும் பழக்கம இல்ல. கப்பன் பார்க்கில் இருக்கும் சிலை விக்டோரியா என்பதே சில வருடங்களுக்கு முன் தெரிந்துகொண்ட பொது அறிவு. பத்து பேர் வெள்ளையும் சொள்ளையுமா ஒரு செல்பி ஸ்டிக் போல ஒரு கம்பில் மாலையை மாட்டி அதற்கு அணிவிக்க முயற்சி.போட்டோக்கு போஸ் கொடுத்தது காமெடியாக இருந்தது. நம்ம ஊர் சிலைக்கு மாலை போட போனா கலவரமால்ல ஆக்கிப்பிடுவாய்ங்க..ஆத்தாடி. வயலன்ட் தெரியாத சைலன்ட் பெங்களூர் அரசியல்.

வழியில் இன்பாக்ஸ் மிளிரியது. கீர்த்தி இது உண்மையா என்றார். ஐந்து வருடத்தில் பெங்களூர் சந்திக்கப்போகும் மிக பயங்கர பிரச்னைகளை எடுத்துரைத்த கட்டுரை.
ஏரிகள் ஆக்கிரமிப்பு, நீர் மேலாண்மை, காவிரியில் இருந்து ஆயிரம் அடி உயரே தண்ணிர் பம்ப் செய்யப்படும் விதம், வானுயுர கட்டிடம் , கடுமையான டிராபிக், வெட்டப்பட்ட லட்ச லட்ச மரங்கள் பற்றி IISC மாணவர்கள் எழுதிய கட்டுரை.

இருவது வருடம் முன்பு நானும் தரனும் சுசுகி பைக்கில் NEW BEL ரோடில் செல்வோம். இரு பக்கமும் சோலை மரங்கள். வண்டியில் போனாலே குளிரும். 365 நாட்களும். அந்த தெருவின் ஒரு பகுதி அப்படி. திருமண புது ஜோடி காலங்கள் அந்த குளிரில் மகிழ்ச்சி கொண்டாடியது. இந்த தெருவில் சுஜாதா ஒரு காலத்தில் வசித்தார். இப்பொழுது தெரு, ரோடு அல்ல கமர்ஷியல் ஏரியா. இன்று போனாலே கடுப்பாக இருக்கிறது. ஜோடியா போனா இருக்கும் காதலும் போய் கடுப்பு வரும்போல ஆகிவிட்டது அந்த சோலை தெரு. இப்பொழுது அதுபோன்ற குளு குளு தெருக்கள் நினைவில் மட்டுமே.

ஏரிகள் போதும் குடிநீர் தேவைக்கு. அத்தனை ஏரிகள் இங்கு. எல்லாம் போச்சு. மெட்ரோக்கு வெட்டிய லட்சகணக்கான மரங்களுக்கு பதிலே காணும். மரங்களை முளைகிறதோ இல்லையோ தெருக்கு ஒன்று மால்கள் முளைக்கிறது. அசுர வளர்ச்சி என்று சொன்னால் போதாது. அத்தனை கார்களுக்கு இடமே இல்லை இங்கு. கிருஷ்ணா காலத்தில் ஐடி வந்தது வரம் என்று நாங்கள் நினைத்தோம். அதுவே எங்களின் சாபம் ஆகியது.

அந்த கட்டுரைகள் நினைவை கிளறியது. பெங்களூரில் இருந்து தப்பி மாயவரம் போய்விடு என்றது இன்பாக்ஸ் செய்தி. மாயவரம் ஒரு குழந்தை என்றால் எனக்கு பெங்களூரு இன்னொரு குழந்தை. நான் ஒரு உண்மையான பெங்களூரியன். எத்தன்னை அழுக்காக ஆகட்டும், குப்பைகள் சேரட்டும் அது என் குழந்தைதான். விடுவது என்பது கனவில் கூட இல்லை என்றேன். லோக்கல் எம்.எம் ல " நீ யாரா இருக்கலாம். எங்க வேணா இருக்கலாம், எப்படி வேணா இருக்கலாம், எங்க ஊருக்கு வா, வந்தா கன்னடதவனா இரு". இதை அதிக மொழியில் மொழிபெயர்க்க சொல்லி பரிசு கொடுத்தார்கள். அத்தனை ஸ்பீடா போன் நம்பர் சொல்லியும் பலர் போன் செய்ய முடிவது ஆச்சர்யம். தமிழில் சொல்கிறேன் என்று கன்னட தமிழில் மாத்தாடினார்கள்.

கப்பன் பார்க்கின் இருபுறமும் பெயர தெரியாத வெள்ளைப் பூக்கள் . ஒருப் பெண் ஸ்கர்ட், நீள அழகிய கால்களுடன் பாயின்ட் ஷூ போட்டுகொண்டு காரில் ஏறினாள்.. நமக்கு ஹீல்ஸ் தடுக்குது..இதில் எங்கு பாயின்ட் ஷூ இதெல்லாம் காரில் போய் சொகுசா இறங்குபவர்களுக்குதான் லாயக்கு என்று கார் ஒட்டிக்கொண்டே சிந்தித்தேன். மனித முரண்

ஒரு ஆட்டோ குழந்தை தூறலை கை நீட்டி எடுத்துகொண்டது. பிரசாதத்தை தெய்வம் வாங்குவதுப் போல. கார் கண்ணாடிகளை இறக்கி விட்டேன். தூறலை ரசித்தேன். போனில் இங்கு மழை டிராபிக்கில் மாட்டிகொள்வாய்..சீக்கிரம் வீட்டுக்கு வா என கேட்க..வீட்டுக்கு வந்து ஒரு காபி, மிக்சருடன் மெல்லிய காற்றில் பெங்களூரை ரசிக்கிறேன். என் குழ்ந்தை என்றும் என் நம்பிக்கையை பொய்க்காமல் மீண்டு வரும், தன்னை மாற்றிக்கொள்ளும் என்று புரிந்தது. அதற்குள் சமாளித்து விடுவோம். we are bangaloreans.

Saturday, April 9, 2016

என் கதை. நன்றி Your Story

'நள்ளிரவில் கழுத்து நிறைய நகைகளுடன் என்றைக்கு ஒரு பெண் தனியாக அச்சமின்றி தெருவில் நடந்து செல்ல முடிகிறதோ, அன்றைக்குத்தான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாகச் சொல்ல முடியும்' என்று கூறினார் தேசப்பிதா மகாத்மா காந்தி. அவருக்கு இன்று ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட் இருந்திருந்தால் இப்படிச் சொல்லியிருக்கலாம்...
"ஒரு பெண், தான் விரும்பி எடுத்த செல்ஃபியையும், தன் மனதில் உதித்த எண்ணத்தை எடிட் செய்யாமலும் 'பின்விளைவுகள்' ஏதுமின்றி என்றைக்கு ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட முடிகிறதோ..."

ஆம், ஃபேஸ்புக்கில் நட்பு வட்டாரத்துடன் தங்கள் படங்களைப் பகிர்ந்து மகிழ்ந்தால், அது எங்கெங்கோ வெவ்வேறு அவதாரத்தில் வலம் வந்து அதிர்ச்சி அளிக்கின்றன. கொஞ்சம் கவனம் பெறும்படி செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது தீவிரமாக எழுதினாலோ வேறு விதமான எதிர்வினைகளை சந்திக்க நேரிடுகிறது.




இத்தகைய சூழலில், ஃபேஸ்புக்கில் மிகத் தீவிரமாக இயங்கி, அதன் மூலம் பல தளங்களில் கவனம் ஈர்த்துள்ள கிர்த்திகா தரண், பெண் என்பதாலேயே ஃபேஸ்புக்கில் சந்திக்க நேர்ந்தப் பிரச்சினைகள் பற்றியும், அதை எதிர்கொண்ட விதம் குறித்தும் தமிழ் யுவர் ஸ்டோரியுடன் அனுபவங்களைப் பகிர்ந்தார். அது அப்படியே அவர் மொழி நடையில்...


நாங்க தனி ஆள் அல்ல...\
ஆங்கிலத்தில் இரு வரி பதிவுகள், அங்கே போனேன், இங்கே போனேன் என்று சில புகைப்படங்கள், இரண்டு புத்தர் அல்லது ஜென் தத்துவ பகிர்வுகள்... பத்து சொந்த பந்தம், அக்கம் பக்கம், கல்லூரி, பள்ளித் தோழர்களைக் கண்டுபிடித்து அளவாடுதல்கள்... இப்படிதான் பல பேரின் ஃபேஸ்புக் பக்கங்கள் போல என் பக்கமும் சென்றது.

ஒருநாள் தோழி, 'வா கவிதைப் பக்கம் திறந்து இருக்கிறோம். வெறும் கல்லூரி மற்றும் தெரிந்தவர்கள்' என்று கூற, அப்பொழுதுதான் தமிழில் எழுதும் இத்தனை பேர் இருக்கிறார்கள் என்றுக் கண்டுகொண்டேன். அப்படியே வெளியேறி ஒவ்வொரு பக்கமாக போய் நானே சேர்த்துக்கொண்டு, அவர்கள் கொடுப்பதை ஏற்று கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்தேன். ஒரு தோழி சொன்னதால் பப்ளிக் செட்டிங் வைத்து பதிவுகள் போட ஆரம்பித்தேன். அதனால் ஃபாலோவர்ஸ் ஆரம்பித்து இன்று 20 ஆயிரத்தைத் தொடப்போகிறது.
இது எல்லாவற்றையும் விட நண்பர் ஒருவர் ஆரம்பித்த டயட் குழுவில் இணைந்து என் உடல் எடையை பதினெட்டு கிலோ குறைத்தேன். இன்றும் நன்றிக்கு உரிய மனதில் மறக்க முடியா நபர் அவர். இன்று எங்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் 130 பெண்கள். அதில் 60-க்கும் மேலே உடல் இளைப்பு. ஆரோக்கிய மாற்றம். இதற்கு ஒரு ஃபேஸ்புக் நல்ல நட்பின் வழிக்காட்டுதல் இல்லாமல் சாதித்து இருக்க முடியாது. அது அடுத்தடுத்து ஃபேஸ்புக் பக்கமாக விரிவடைய காத்து இருக்கிறது.

இப்படி பல பல நன்மைகள் இங்கு வந்ததால் கிடைத்தது. அடுத்து கிறுக்கி வைத்தேனா, எழுதினேனா என்றெல்லாம் தெரியாது. தோழி ஃபேஸ்புக் பரண் என்று பக்கம் வைத்து இருந்தார். அவரின் ஊக்குவிப்பு இல்லாமல் நான் எழுதியிருக்க மாட்டேன். அவர் ஒற்றைப் பெண்ணாக பின் இருந்து வளர்த்து விட்டவர்கள் பலர். இதுபோன்ற மனிதர்கள் சமூக வலைதளத்தில் அரிது.
ரிலாக்ஸ் ப்ளீஸ், வலைபேச்சு என்று பகிரத் தொடங்கினார்கள். ஏன் என்றால் தேடித்தேடி பெண்கள் பதிவை படிக்க வேண்டிய காலம் அது. வெகு சில பெண்கள் மட்டுமே பப்ளிக் செட்டிங்க்ஸில் பதிவு போடுவார்கள். எனவே, எங்களை போன்ற பெண்கள் மிக எளிதில் வெளியே வர முடிந்தது.
இப்படி போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வராமல் இல்ல. உடைக் கட்டுப்பாடு, பெண்ணியம் என்று பேச ஆரம்பித்தால் பலருக்கு பிடிப்பதில்லை. பெண்கள் என்றால் ஒரு மொக்கை, ஜோக், கவிதை, கட்டுரை என்று போய்கொண்டு இருக்கும் வரை பிரச்சனை இல்லை. இதுவே அரசியல், சாதி, சமூகம், சமூக உதவி என்று இறங்கி விட்டால் மிகப் பெரிய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆண்களுக்கும் உண்டு. ஆனால் பெண்களுக்கு வேறு விதம்.

அந்த மோசமான அனுபவமும் திரண்ட தோழிகளும்...
ஒருமுறை என்னுடையே புகைப்படத்தை ஒரு மோசமான பக்கத்தில் கண்டு அதிர்ந்தேன். அதில் மிக மோசமான பின்னூட்டங்கள். அது வரை இந்த உலகின் மறுபக்கத்தை அறியாப் பெண் நான். உள்ளே போய் பார்க்க பார்க்க இணையத்தின் நடமாடும் அத்தனை கொடூரமும் புரிந்தது. தூக்கமே வரவில்லை. என்ன மாதிரியான உலகம் என்று மறுபக்கத்தை முதன் முதலில் பார்த்த அதிர்ச்சி. இப்படி கூட நடக்குமா என்றெல்லாம் யோசனை.
இதற்கு முதல் படியாக அனைவரும் ஒரு கோரமான முகமூடி முகத்தை ஃப்ரோபைலில் வைத்துக்கொண்டோம். அன்று முதன்முதலில் தீ பற்றியது. உடனே அடுத்து ஒரு குழுவை ஆரம்பித்தோம். அனைவரும் ஒன்று சேர்ந்து எங்கள் புகைப்படங்கள் பகிர்ந்து இருந்த பல பக்கங்களை முடக்கினோம். பிடோபில் எனப்படும் குழ்நதைகளை வைத்து செயல்படும் ஐம்பது பக்கங்களை எங்கள் குழு தோழி பானுவின் உதவியுடன் மூடச் செய்தோம். இதுபோன்று அந்தக் குழு பல விஷயங்களை செய்துகொண்டு பல பெண்களுக்கு நம்பிக்கையை அளித்தது.

யார் வந்தாலும் கவலைப்பட வேண்டாம். எல்லாருக்கும் நம்பிக்கை அளித்த நேரம். பலர் புகைப்படங்களை, அதாவது முகத்தை வெளியே காட்ட அந்தக் குழு ஒரு நம்பிக்கையை அளித்தது. இன்றும் பெண்கள் குழுக்கள் மூலமே பல பெண்களுக்கு சமூக வலைதளத்தில் நடமாட நம்மை போன்று இருக்கிறார்கள் என்று பார்த்து துணிச்சல் வருகிறது. அந்த வகையில் பெண்கள் குழுக்கள் வரவேற்கப்படுவது மிக நல்லது.

எங்கு சென்றாலும் நம் புகைப்படம் பகிரும் இடம் உண்டு. அது ஃபேஸ்புக்கின் மூலம் மட்டுமே போக வேண்டும் என்பது இல்லை. கூகுள் போட்டோஸ் சியர்ச் இஞ்சின் சென்று நம் போட்டோ வைத்து எங்கெங்கு பகிரப்பட்டு இருக்கிறது என்று கண்டுபிடித்து விடலாம்.

பத்திரிக்கையில் வருகிறது, பொதுக் கூட்டங்களில், பொது இடங்களில் இருக்கும்பொழுது பல கேமரா கண்கள் கவனிக்கின்றன. எனவே எதைப் பற்றியும் யோசிக்காமல் ஆண்கள் போல பெண்களும் சுதந்திரமாக பப்ளிக் செட்டிங்க்ஸ் வைத்து புகைப்படம் போட வேண்டும் என்பதே விருப்பம். எல்லாரும் செயல்பட்டால் மட்டுமே இதற்கு ஒரு முடிவு வரும். 

பயந்துகொண்டே இருந்தால் கற்காலத்தில் இருக்க வேண்டியதுதான்.
அப்படி போடும்பொழுது பல நல்ல பின்னூட்டங்கள், சில வேறு விதமான பின்னூட்டங்கள் வரும். அதைப் பிடிக்காவிடில் டெலிட் செய்யும் அதிகாரம் நம்மிடம் எப்பவும் உண்டு. நான் அதை பெரிதாக எண்ணி இருக்கவில்லை. யார் பாராட்டியோ, இல்லை நக்கல் செய்தோ பின்னூட்டம் இட்டால் மனதுக்கு ஏற்ப வார்த்தைகள் என்றே கடந்துக்கொண்டு இருந்தேன்.

நடுவில் ஒரு நண்பர் எங்கள் புகைப்படங்களை பகிர்ந்தார். அதனால் அவரை நட்புப் பட்டியலில் இருந்து எடுக்கச் சொல்லி பெண்களுக்கு குழுவில் அழைப்பு விடுத்தோம். ஆனால் அவர் அதை பலரின் வேண்டுகோளுக்கு இணங்க எடுத்துவிட்டதால் பிரச்சனை அதோடு முடிந்துவிட்டது. இந்த முயற்சியில் சில நட்பு இழப்புகள். நாம் துணிவோடு செய்யும் விஷயங்களுக்கு என்றும் உடனே ஆதரவு கிடைத்து விடாது. ஆனால் பலவீனமான பெண்களை பலவீனமகவே வைத்திருக்க விரும்பும் சமூகம் என்று புரிந்துகொண்டேன்.
சில பெண்களும் பின்னால் இருந்து முன்னே வரும்பொழுதுதான் எல்லாவற்றையும் உடைக்க முடியும். கமல்ஹாசன் போன்றோரது படங்கள் போல நாம் காலத்துக்கு முன்னே பயனப்பட்டால் தோல்வியை சந்திக்க வேண்டும். ஆனால் என்றுமே நம் முதல் முயற்சிக்கு மதிப்பு இருக்கும். ஒரு வருடத்தில் எல்லாம் மாறிவிடும். ஒவ்வொருத்தராக தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொண்டு வருவார்கள்.



என்னை 'கவனித்த' கண்கள்...
ஆனால், இத்தனைக்கு பிறகு என்னை பல கண்கள் கவனிப்பதை கவனிக்கத் தவறிவிட்டேன். சில சமூக பிரச்னைகளை கவனித்து கட்டுரை எழுதியும், அதை முகநூலில் பதிந்ததும் பல எதிர்ப்பாளர்களை எனக்கே தெரியாமல் சேமித்து இருக்கிறேன். அதற்கு நான் மட்டுமே பொறுப்பு என்பதை அறிந்தும் வைத்திருக்கிறேன்.

சிலர் என் படங்களுக்கு போட்ட பின்னூட்டங்களை வைத்து சிலர் கேலியாக விடாமல் பதிவுகள் போட்டு தாக்க ஆரம்பித்தனர். என்னுடைய பதில் வெறும் அமைதி மட்டுமே இருந்தது. மதிப்பு உள்ள சிலவற்றை மட்டுமே எதிர்க்க வேண்டும் என்ற முடிவு செய்தேன். கண்டிப்பாக அதுபோன்ற பதிவுகளில் பலவும் சைபர் சட்டப்படி கிரிமினல் குற்றங்கள்தான். சிலவற்றை இப்படியும் பார்த்து கடக்க, புறக்கணிக்க கற்றுக்கொண்டேன். பெரிய புகழ் பெற்ற ஆட்களைக்கூட ஃபேஸ்புக் விட்டு வைப்பது இல்லை. நம் போன்ற சாதாரண நிலைமையில் இருந்து வந்த ஆட்களை விட்டு வைக்குமா?

மிகக் கடினமான நேரம்தான். நெருங்கிய நண்பர்கள் என்றும் பார்க்காமால் நட்பில் இருந்து விலக வேண்டி இருந்தது. மனதில் பகமையில்லை, நட்பு மட்டுமே. ஆனால் கருத்தில் பகைமை. ஒரு பெண்ணை பலர் முன்னிலையில் அவமானப்படுத்தும் பொழுது பெண்கள் நம்மை ஆதரிக்க வேண்டாம். ஆனால், ஒதுங்கியாவது இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை. என்னைச் சுற்றி நடந்த கதைகள் பல எனக்கே புரியவில்லை. ஏதாவது தப்பு இருந்தால் மன்னிப்பு கேட்டு சரி செய்யலாம். என் சுவற்றில் விவாதிக்கலாம். ஆனால் அதை நேரடியாக சொல்ல யாருக்கும் துணிவு வராமல் பதிவுகளில் புகழுக்கு ஆசைப்படுபவள் என்ற வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு விளம்பரம் செய்கிறேன் என்று ஏதோ ஏதோ அவர்கள் கற்பனைக்கு எழுதி கொண்டார்கள். நான் யாருக்கும் எந்த பதிலும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஒரு நட்பு போதும் எனக்கு, திரும்ப எல்லாவற்றையும் பெற.
எல்லாவற்றில் இருந்தும் விலகி என்னை தனிமையாக வைத்துக்கொண்டேன். கடின நேரங்களில் தனிமை அவசியம். யாரிடமும் புலம்பி வார்த்தைகளை விட்டு விட்டால் இன்னும் காலம் மோசமாக்கும். நெருங்கிய இரு தோழிகளை தவிர எல்லா தொடர்புகளில் இருந்தும் வெளியே வந்தேன். ஆனால், கொட்டிய வார்த்தைகள் அவர்களுடையது. புத்தர் ஒரு கதையில் சொன்னதுபோல நான் என் மனதில் வாங்கி அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆம், மனிதர்கள் சிலருக்கு பாராட்டு கிடைக்கும் பொழுது சிலரால் அங்கீகரிக்க முடியாது. நான் தகுதி உடைவாளா இல்லையா என்ற கோணத்திற்கு செல்லவில்லை. எந்த அடிப்படை மனமும் யாராவது பாராட்டினால் ஏற்றுக்கொள்ளும். அதை மறுக்காது. அதுபோல எனக்கு வரும் அங்கிகாரங்களை மறுக்கவில்லை. விருதை திருப்பி கொடுக்கும் அரசியல் எல்லாம் பழகவில்லை.

கடினம்தான். அந்த நேரத்தில் ஒரு பெண்ணை அசிங்கமாக எழுதுவதை பார்த்துவிட்டு கடப்பது கொடிய நேரம்தான். அதற்கு பெண்களே பின்னூட்டம் இடுவது இன்னும் கொடுமையாக இருக்கும். இதை எதிர்க்காவிடில் எந்தப் பெண்ணுக்கும் முன்மாதிரியாக ஆகிவிடும். பெண்களை முடக்க எளிதில் எடுக்கும் ஆயுதமாகிடும் என்று யாரும் ஏன் உணரவில்லை என்று புரியாத புதிர்தான். இருப்பினும் ஒரு தோழி எல்லா இடங்களிலும் கடுமையாக எதிர்த்தாள். நிஜமாக அந்த நேரத்தில் தெய்வம் மனித வடிவம்தான் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கிடைத்தது. என்னிடம் எல்லாவற்றையும் தட்டிகேள் என்று துணிச்சல் ஊட்டினாள். என்னைப் பொறுத்தவரை புறக்கணிப்பே ஒரு தண்டனை. ஒதுங்குதல் இன்னும் நல்லது.

தவறுகள் இருக்கும்பொழுது நேரடியாக சுட்டிக்காட்டவே நண்பர்கள். அப்படி இல்லாமல் போனால் நமக்கு சாபம்தான். இந்த நேரத்தில் ஒரு பத்து அல்லது இருவது பேர் எதிர்த்தால், ஆயிரக்கணக்கில் வரமாக துணைக்கு இருந்தனர். இப்படிதான் கடந்தேன் சமூக வலைதளத்தின் கோரத் தாக்குதலில் இருந்து. யாரும் வேண்டுமென்று செய்யவில்லை. ஏதோ என் ஒரு செயல் அவர்களை தூண்டி இருக்க வேண்டும். நான் பெண் என்று இதற்கு பின் ஒளிந்துக்கொள்ள மாட்டேன். ஆனால் பெண்ணால் இருப்பதால் மட்டுமே ஒழுக்க குறைவான அசிங்கமான விமர்சனங்கள் எழுதப்பட்டது. ஒருவர் உச்சிக்கே சென்று மிக மோசமான ஒரு வார்த்தையை உபயோகித்து இருந்தார். இது காலம் காலமாக பெண்கள் மேல் போடப்படும் விலங்கு. உன்னை எதிர்க்க நான் கையில் எடுத்த ஆயுதம் என்ன தெரியுமா என்று கொக்கரிப்பு. வீட்டிலும் சமூகத்திலும் எல்லா மட்டத்திலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனை. இன்னொரு பிரச்னை ஆண் நண்பர்களும் துணைக்கு வர யோசிப்பார்கள். பெண் நண்பர்கள் ஏன் வம்பு என்பார்கள் தனியாக சமாளிக்க வேண்டிய நேரம். இதற்கு இணையதளம் மட்டும் காரணம் என்று சொல்ல மாட்டேன். ஆனால், இணையத்தில் வக்கிரங்களை கொட்டிவிட்டு செல்வது எளிதாக உள்ளது.
நமக்கு இன்னும் தன்னம்பிக்கையை வளர்க்கும் பயிற்சி. என்னை எதிர்த்து எது செய்தாலும், அது எனக்கு மிகுந்த நல்லவற்றை மட்டுமே அளித்து இருக்கிறது. நாம் அந்த நேரத்தில் அமைதியாக வேடிக்கை பார்த்தால் போதும். எல்லாம் கடந்து விடும். என்னுடைய மன உறுதி மேம்பட்ட நேரமாகவே என் கடின நேரங்களை கருதுகிறேன். எதுவும் கெடுதல் இல்லை என்ற மனநிலை இருந்தால் போதும். எல்லாம் கடந்து நல்லதே நடக்கும்.

என் மனதில் பகைமை இல்லாமல் இருப்பது மட்டுமே எனக்கு நல்லது என்பதால் யார் மேலும் எந்த பகைமையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறேன். எனவே எந்தப் பகைமையும் என்னிடம் ஓட்டுவதே இல்லை. கொஞ்ச நாள் இணையத்தில் இருந்து விலகி முழுக்க மீண்டேன். திரும்ப எதிர்க்கொள்ளும் தைரியம் மட்டும் போதும். நாம் எந்த இடத்திலும் நிம்மதியாக இருக்க முடியும்.

இணையதளம் இல்லாவிடில் என் கட்டுரைகள் விகடன், தி இந்து ஆன்லைன், தோழி, அவள் விகடன், தின இதழ் போன்ற பத்திரிகைகள், அதைத் தவிர பல செய்திகள், சமூகம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பல எழுத்து ஆளுமைகளின் தொடர்புகள், பல்வேறு குழு மூலமாக பல்வேறு சமூக உதவிகள் எதுவும் சாத்தியம் ஆகி இருக்காது.

ஒரு முக்கிய கடைசிக் குறிப்பு...
எனவே, சமூக வலைதளங்களில் இருக்கும் சிறு முட்களை அகற்றிவிட்டு ரோஜாக்களின் வாசனையை முகர்ந்து பெண்கள் அனைவரும் இணையத்தை சுதந்திரமாக பயன்படுத்த வேண்டும் என்பதே என் ஆசை. அதுவும் ஆண்கள் போல அரசியல் பதிவுகள், பப்ளிக் செட்டிங்க்ஸ் பதிவுகள் இடப்பட வேண்டும். தனிப்பட்ட நிகழ்வுகளின் புகைப்படங்கள் என்று துணிச்சலாக பகிர முன்வர வேண்டும். அனைவரும் வரும் வேளையில் எல்லாமே மிக சாத்தியமான விஷயம் ஆகிவிடும். ஆனால் காலப்போக்கில் இணையம் அனைத்தையும் சாத்தியம் ஆக்கிவிடும். அதுவும் எளிதில் வேகமாக. எனவே, நம்பிக்கையுடன் ஒவ்வொருவரும் பயணிக்க வேண்டிய நேரமிது.

ம்... இன்னொரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேன். ஃபேஸ்புக்கில் புதிதாக வருபவர்கள் நிச்சயம் ஒரு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பலர் பல உறவுகளில் சகஜ தன்மைக்காக கூப்பிடுவது வழக்கம். ஆனால், அப்படிதான் பழகுவார்கள் என்று எதிர்பார்ததால் ஏமாற்றத்திற்கு ஆளாக நேரிடும். இன்பாக்ஸ் திறந்து அனைவருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. வெளியில் வரும் நட்பு போதும் என்று இருப்பது பாதுகாப்பு. முக்கியமான தனிப்பட்ட விஷயங்களுக்கு மட்டும் உபயோகித்தால் போதும். ஃபில்டர் மெசேஜ்களை என்றைகாவது பார்த்து சுத்தம் செய்தால்போதும்...
http://tamil.yourstory.com/read/609add5004/-quot-as-men-and-women-on-facebook-with-photo-freely-to-day-tracking-taran-ventum-kirttika நன்றி